அமெரிக்கா பொருளாதாரத்திலும் தொழில்நுட்பத்திலும் உச்சம் தொட்ட நாடாகத் திகழ்கிறது. அமெரிக்க இராணுவ பலம் என்று பார்த்தால், உலக நாடுகளின் தரவரிசையில் முதலாவது இடத்தில் உள்ளது. உலக அரங்கில் தனது மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்த, 2026 பாதுகாப்பு பட்ஜெட்டை முன்னெப்போதும் இல்லாதவாறு, கடந்த 2025 ஆண்டை விட 13.4% உயர்த்தியுள்ளது. 2026 நிதி ஆண்டுக்கான பாதுகாப்பு பட்ஜெட் நிதி ஒதுக்கீடு 961.6 பில்லியன் ஆகும். இது 848.3 பில்லியன் நிர்வாக நிதியாகவும், 113.3 பில்லியன் கட்டாய நிதியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் தற்காப்பிற்காகச் செலவிடும் நிதியில் ஏறத்தாழ 40 சதவீதத்தைத் தனி ஒரு நாடாக அமெரிக்கா வாரி வழங்கியுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட்டோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இது சுமார் 10 மடங்கு பெரியதாகும். உலக நாடுகளின் இராணுவத் தரவரிசையில் இரண்டாவது நாடாக இருக்கும் சீனாவின் பட்ஜெட்டை காட்டிலும் மூன்று மடங்கு அமெரிக்காவின் பாதுகாப்பு பட்ஜெட் அதிகமாகும். இது உலக வல்லரசுகளின் போட்டியில் அமெரிக்காவை இன்றும் எட்டாத உயரத்தில் நிறுத்தியுள்ளது.
அமெரிக்கத் தரைப்படை: நவீனத் தொழில்நுட்பமும் போர் வலிமையும்
அமெரிக்க இராணுவத்தில் ஒட்டுமொத்தமாக 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளனர். இதில் சுமார் 13 இலட்சம் பேர் இராணுவப் பணியில் இருக்கும் நிரந்தர வீரர்கள் (Active Duty) ஆவர். அவசரக் காலங்களில் மட்டும் அழைக்கப்படக்கூடிய நிலையில் 7 இலட்சத்திற்கும் அதிகமான வீரர்கள் உள்ளனர். மேலும், உள்நாட்டு எல்லை மற்றும் கடல் பாதுகாப்பிற்காக 42,000 வீரர்களைக் கொண்ட கடலோரக் காவல் படை (Coast Guard) உள்ளது.
அமெரிக்க இராணுவப் பலம் என்று பார்க்கும்போது, தரைப்படை மிக முக்கியமானது. அமெரிக்கத் தரைப்படை வாகனங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் அதிநவீன ஏவுகணைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கத் தரைப்படையிடம் சுமார் 2,50,000 வாகனங்கள் உள்ளன. அவற்றில்:
- முதன்மைப் போர் டாங்கிகள் (Main Battle Tanks): 5,500
- கவசப் போர் வாகனங்கள் (Armored Fighting Vehicles): 4,500-க்கும் மேல்
- சக்கரக் கவச வாகனங்கள் (Wheeled Armored Vehicles): 4,300-க்கும் மேல்
- கண்ணிவெடி எதிர்ப்பு வாகனங்கள் (MRAP): 12,000
- தற்காப்புக் கவச வாகனங்கள்: 13,000
- இலகுரக வாகனங்கள்: 1,00,000-க்கும் மேல்
முக்கிய போர் வாகனங்கள்:
1. M1A2 ஆப்ரம்ஸ் டாங்க் (M1A2 Abrams)

இது எதிரிகளின் கவச வாகனங்களை அழிப்பதிலும், தரைவழித் தாக்குதலை முன்னின்று வழிநடத்துவதிலும் வல்லது. இதில் 120 மி.மீ பீரங்கி மற்றும் அதிநவீன கவசப் பாதுகாப்பு உள்ளது. 2026 பட்ஜெட்டில் SEPv4 என்ற புதிய மாற்றத்தின் மூலம், எதிரிகளின் ஏவுகணைகளைத் தானாகவே கண்டறிந்து தாக்கும் திறன் இதற்கு வழங்கப்பட்டுள்ளது.
2. M2 பிராட்லி போர் வாகனம் (M2 Bradley)
இது போர் வீரர்களைப் பாதுகாப்பாகப் போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லப் பயன்படும் வாகனம். இதில் TOW ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் எதிரி டாங்கிகளைத் தொலைவில் இருந்தே அழிக்க முடியும்.
3. ஸ்டிரைக்கர் வாகனங்கள் (Stryker Vehicles)
இவை வேகமான சக்கர வாகனங்கள். போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, நகர்ப்புறங்களில் போர் வீரர்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக மாற்ற இவை பயன்படுகின்றன. இவை எடை குறைந்த கவச வாகனங்கள் என்பதால், விமானங்களின் மூலம் இவற்றை எளிதாகக் கொண்டு செல்ல முடியும்.
4. ஹைமார்ஸ் ஏவுகணை வாகனம் (HIMARS)
இது நீண்ட தூரத்தில் இருக்கும் எதிரி முகாம்கள் மற்றும் தளவாடங்களை GPS வழிகாட்டல் மூலம் மிகத் துல்லியமாக அழிக்கக்கூடியது. இது ஒரு லாரியில் பொருத்தப்பட்ட ஏவுகணைத் தளமாகும். இதனால் ஒரு தாக்குதலை நடத்திவிட்டு, உடனடியாக அந்த இடத்தை விட்டு இது நகர்ந்துவிடும் (Shoot-and-scoot).
அமெரிக்க விமானப்படை: வான்வெளியின் அசைக்க முடியாத அதிகாரம்
அமெரிக்கா தனது வான்வழி வலிமையை வெறும் ஒரு பாதுகாப்புப் பிரிவாகப் பார்க்காமல், உலகளாவிய ஆதிக்கத்தின் அடையாளமாகவே கருதுகிறது. அமெரிக்கா சுமார் 13,000 முதல் 13,100 இராணுவ விமானங்களைக் கொண்டுள்ளது. இது உலகிலேயே மிகப்பெரிய எண்ணிக்கையாகும். விமானங்களின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ரஷ்யாவிடம் கூட 4,200 முதல் 4,300 வரையிலான இராணுவ விமானங்களே உள்ளன. மூன்றாவது இடத்தில் இருக்கும் சீனா 3,500 முதல் 3,600 இராணுவ விமானங்களை மட்டுமே கொண்டுள்ளது.
போர் விமானங்கள்:
அமெரிக்காவின் உண்மையான பலம் அதன் அதிநவீன போர் விமானங்களில் உள்ளது. அமெரிக்க வான்வெளியில் சுமார் 1,800 போர் விமானங்கள் உள்ளன. இது உலகிலேயே மிகப்பெரிய மற்றும் அதிநவீன போர் விமானக் கட்டமைப்பாகும்.
அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறை (5th Generation) போர் விமானங்கள்:
1. F-22 ராப்டர் (F-22 Raptor)
இது வான்வெளியில் எதிரி நாடுகளின் விமானங்களை எதிர்கொண்டு அழிப்பதில் சிறந்த விமானமாகும். பொதுவாகப் போர் விமானங்களின் பின்பகுதியில் எஞ்சினிலிருந்து வெளிவரும் புகையில் எரிபொருளைச் செலுத்தி, மீண்டும் ஒருமுறை நெருப்பை உருவாக்கி, விமானத்தை அதிக விசையுடன் முன்னோக்கித் தள்ளி, ஒலியை விட வேகமாகச் செல்லச் செய்யும் முறை ‘ஆஃப்டர் பர்னர்’ (Afterburner) எனப்படும். ஆனால், F-22 ராப்டர் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாமலேயே ஒலியை விட அதிவேகத்தில் செல்லும் ‘சூப்பர்க்குரூஸ்’ (Supercruise) திறன் கொண்ட போர் விமானமாகும்.
‘ஆஃப்டர் பர்னர்’ முறையைப் பயன்படுத்தாமல் இருப்பதனால் அதிக வெப்பம் வெளியேறாது. இதனால் ரேடார்களின் மூலம் எதிரிகளால் இந்த விமானத்தைக் கண்டுபிடிப்பது கடினம். ‘சூப்பர்க்குரூஸ்’ முறையில் வெப்பம் குறைவாகவே இருக்கும். இந்த விமானம் குறைந்த எரிபொருளைப் பயன்படுத்தி நீண்ட நேரத்திற்கு அதிவேகமாகப் பயணிக்க முடியும். F-22 விமானத்தின் தொழில்நுட்பத்தைப் ரகசியமாக வைத்திருக்க, அமெரிக்கா இதனை வெளிநாடுகள் யாருக்கும் விற்பனை செய்வதில்லை.
இந்த விமானத்தை ‘வானின் அரசன்’ என்றே கூறலாம். வான்வெளியில் விமானங்களை வேட்டையாடி அழிப்பதில் F-22 ராப்டரை விடச் சிறந்த விமானங்கள் உலகில் இல்லை (இதில் F-35 போர் விமானமும் அடங்கும்). இது ஒலியை விட 2.25 மடங்கு வேகத்தில் செல்லக்கூடியது. இதன் வடிவம் மற்றும் அதன் மீது பூசப்பட்டுள்ள சிறப்புப் பூச்சுகள் ரேடாரில் சிக்காமல் இதைப் பாதுகாக்கின்றன. அமெரிக்காவிடம் இவ்வகை விமானங்கள் சுமார் 187 முதல் 195 வரை உள்ளன.
2. F-35 லைட்னிங் II (F-35 Lightning II)

அமெரிக்காவிடம் சுமார் 443 F-35 லைட்னிங் II போர் விமானங்கள் உள்ளன. இவை மூன்று முக்கிய பிரிவுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன:
- F-35A: விமானப்படைக்காக வடிவமைக்கப்பட்டது.
- F-35B: செங்குத்தாகத் தரையிறங்கும் (Vertical Landing) வசதி கொண்டது; இது கடற்படையினரால் பயன்படுத்தப்படுகிறது.
- F-35C: விமானம் தாங்கிக் கப்பல்களிலிருந்து புறப்படும் வசதி கொண்டது.
F-35 விமானத்தில் உள்ள பிரதான ரேடார் உள்ளிட்ட நவீன சென்சார்கள் மூலம், வான்வழித் தாக்குதலுடன் சேர்த்துத் தரையில் உள்ள பதுங்கு குழிகள் மற்றும் எதிரிகளின் ஏவுகணைத் தளங்களைத் துல்லியமாக அழிப்பதில் இது F-22 விமானத்தை விடச் சிறந்தது. ஏனெனில், F-22 பிரத்யேகமாக வான்வழிச் சண்டைக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது.
F-35 விமானம் தனது இலக்கு குறித்த தரவுகளை மற்ற விமானங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆற்றல் கொண்டது (Data Linking). ஆனால், F-22 விமானத்தில் மற்ற ரக விமானங்களுடன் இத்தகைய தரவுகளைப் பகிர முடியாது. F-35 எதிரிகளின் இலக்குகளை மிகத் தொலைவிலேயே டிஜிட்டல் முறையில் கண்டறிந்துவிடும். இதில் பல்வேறு வகையான ஆயுதங்களைப் பயன்படுத்த முடியும் என்பதுடன், நகரும் இலக்குகளைக் கூடத் துல்லியமாகத் தாக்கும் திறன் இதற்கு உண்டு (இது F-22-ல் சாத்தியமற்றது).
இதன் ‘ஸ்டெல்த்’ (Stealth) பூச்சுகள் நவீனமானவை மற்றும் பராமரிக்க எளிதானவை. மேலும், F-22 விமானத்தை விட இதன் விலை குறைவானது. இந்த விமானம் ஒலியை விட 1.6 மடங்கு வேகத்தில் செல்லக்கூடியது.
அமெரிக்காவின் வான்வழி முதுகெலும்பு: 4 மற்றும் 4.5-ஆம் தலைமுறை விமானங்கள்
1. F-15 ஈகிள் / F-15E ஸ்டிரைக் ஈகிள் (F-15 Eagle / F-15E Strike Eagle)
அமெரிக்க விமானப்படையிடம் தற்போது சுமார் 400 முதல் 420 F-15 ரக விமானங்கள் உள்ளன. அமெரிக்காவின் வான் ஆதிக்கத்தின் அடையாளமாகத் திகழும் இவை, நவீன போர்க்களத்திற்கு ஏற்பத் தற்போது பெரும் மாற்றங்களைக் கண்டுள்ளன.
வான்வழிச் சண்டையில் இதுவரையில் 104 எதிரி நாட்டு விமானங்களை இது வீழ்த்தியுள்ளது. ஒருமுறை கூட எதிரி நாட்டு விமானங்களால் இது வீழ்த்தப்பட்டதில்லை என்பது இதன் மிகப்பெரிய சாதனை. இருப்பினும், 2026 ஏப்ரல் மாதம் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் மூலம் ஒரு F-15E ஸ்டிரைக் ஈகிள் விமானம் வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதன் புதிய மாடலான F-15EX, சுமார் 29,500 பவுண்டு (13,300 கிலோ) எடையுள்ள ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. இது F-35 சுமக்கும் எடையை விட மிக அதிகமாகும். இதில் அதிவேக ‘ஹைப்பர்சோனிக்’ (Hypersonic) ஏவுகணைகளையும் பொருத்த முடியும்.
2. F-16 ஃபைட்டிங் ஃபால்கன் (F-16 Fighting Falcon)
குறைந்த செலவில் அதிக செயல்திறன் கொண்ட இந்த விமானங்கள் உலகிலேயே அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்காவிடம் 650 முதல் 700 வரையிலான F-16 விமானங்கள் உள்ளன. தற்போது அமெரிக்கா தனது F-16 விமானங்களை Block 70/72 (Viper) தரத்திற்கு மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 20-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்க முடியும்.
F-16 ஃபைட்டிங் ஃபால்கன் விமானத்தில் உள்ள ரேடார் தொழில்நுட்பம், F-22 மற்றும் F-35 விமானங்களில் உள்ளதற்கு இணையானது. இதன் மூலம் எதிரிகளை மிகத் தொலைவிலேயே துல்லியமாகக் கண்டறிய முடியும். இது வான்போர் மற்றும் தரை இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. மேலும், எதிரி நாட்டின் ரேடார்களைக் குழப்பவும், ஏவுகணைகள் குறிவைப்பதைத் தடுக்கவும் உதவும் AN/ALQ-254(v)1 Viper Shield என்ற மின்னணு பாதுகாப்பு கவசம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கடற்படைப் போர் விமானங்கள்
அமெரிக்காவிடம் சுமார் 565 கடற்படைப் போர் விமானங்களான F/A-18 E/F சூப்பர் ஹார்னெட் (Super Hornet) உள்ளன. இதில் ஒற்றை இருக்கை கொண்ட மாடல் ‘E’ என்றும், இரட்டை இருக்கை கொண்ட மாடல் ‘F’ என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த விமானம் வான்வெளித் தாக்குதல், தரை மற்றும் கடல் இலக்குகளைத் தாக்குதல் எனப் பன்முகத்தன்மை கொண்டது.
சூப்பர் ஹார்னெட் விமானங்கள் பிரத்யேகமாக விமானம் தாங்கிக் கப்பல்களுக்காக உருவாக்கப்பட்டவை. உப்புக்காற்று மற்றும் ஈரப்பதம் காரணமாக விமானத்தின் உடல் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்கச் சிறப்பு இரசாயனப் பூச்சுகள் பயன்படுத்தப்படுகின்றன.
சாதாரண விமானங்கள் ஓடுதளத்தில் மென்மையாகத் தரையிறங்கும். ஆனால், சூப்பர் ஹார்னெட் ஒரு செங்குத்தான வேகத்தில் கப்பலின் தளத்தில் மோதித் தரையிறங்கும் (Hard Landing). இதற்காக இதன் லேண்டிங் கியர்கள் மிக வலிமையான ஹைட்ராலிக் அமைப்புகளைக் கொண்டுள்ளன. தரையிறங்கும்போது ஏற்படும் அதிர்வுகளை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளும் வகையில் இவை அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.
விமானம் தாங்கிக் கப்பல்களில் இடம் குறைவு என்பதால், இதன் இறக்கைகளை மடித்து வைக்கும் வகையில் (Folding Wings) இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இறக்கைகள் மடியும் வசதி இருந்தாலும், விமானம் பறக்கும்போது ஏற்படும் அழுத்தங்களைத் தாங்கும் வகையில் மிக உறுதியான பிணைப்புகளை இது கொண்டுள்ளது.
சிறப்புப் பிரிவுகள்: குண்டு வீசும் விமானங்கள் (Bombers)
1. B-52 ஸ்ட்ரேடோபோர்ட்ரஸ் (B-52 Stratofortress): இந்த விமானம் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாட்டில் இருந்தாலும், இன்றும் நவீன ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் வலிமை கொண்டது. அமெரிக்காவிடம் இவ்வகையில் 76 விமானங்கள் உள்ளன.
2. B-2 ஸ்பிரிட் (B-2 Spirit): ரேடாருக்குப் புலப்படாமல் கண்டம் விட்டு கண்டம் சென்று அணுஆயுதத் தாக்குதலைக் கூட நடத்தக்கூடிய விமானம் இதுவாகும். அமெரிக்காவிடம் சுமார் 20 விமானங்கள் உள்ளன. ஏப்ரல் 2026-ல் ஈரானுக்கு எதிரான போரின்போது, ஈரானின் சுரங்கங்களில் அமைந்துள்ள ஏவுகணை நகரங்கள் மற்றும் அணுசக்தி மையங்களின் நுழைவு வாயிலைத் தாக்க அமெரிக்கா இந்த விமானத்தையே பயன்படுத்தியது.

3. B-1B லான்சர் (B-1B Lancer): இது சுமார் 75,000 பவுண்டு (34,000 கிலோ) எடையுள்ள ஆயுதங்களைச் சுமந்து செல்லும். தற்போது இந்த விமானங்கள் ‘ஹைப்பர்சோனிக்’ ஏவுகணைகளை ஏவும் வகையில் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவிடம் 46 விமானங்கள் உள்ளன. இவை ஒலியை விட அதிவேகமாகப் பயணிக்கக்கூடியவை.
4. B-21 ரைய்டர் (B-21 Raider): இந்த விமானம் தற்போது சோதனை கட்டத்தில் உள்ளது. இது ஆறாம் தலைமுறை (6th Generation) ‘ஸ்டெல்த்’ விமானமாகும். இது B-2 விமானங்களை விட அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளதால், உலகின் மிகச்சிறந்த ரேடார்களால் கூட இதனைக் கண்டறிய முடியாது. தேவைப்பட்டால் விமானி இல்லாமலேயே தானாகச் சென்று தாக்கும் தொழில்நுட்பத்தில் இது உருவாக்கப்படுகிறது. இந்த விமானம் 2027-ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெலிகாப்டர் படைகள்
தரைப்படை மற்றும் விமானப்படைக்கு ஆதரவாக அமெரிக்கா உலகின் மிகப்பெரிய மற்றும் நவீன ஹெலிகாப்டர்களைக் கொண்டுள்ளது. அமெரிக்காவிடம் 5,900-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் உள்ளன. அதில் சுமார் 1,000 ஹெலிகாப்டர்கள் தாக்குதல் நடத்தும் ஹெலிகாப்டர்களாகும் (Attack Helicopters).

தாக்குதல் ஹெலிகாப்டர்கள்: அமெரிக்காவின் முதன்மையான தாக்குதல் ஹெலிகாப்டர்களாக AH-64 அப்பாச்சி (AH-64 Apache) மற்றும் தற்போதைய AH-64E கார்டியன் (AH-64E Guardian) ரகங்கள் உள்ளன. இதில் உள்ள ‘லாங்போ’ (Longbow) ரேடார் ஒரே நேரத்தில் 128 இலக்குகளைக் கண்டறிந்து, அதில் மிக அபாயகரமான 16 இலக்குகளை வெறும் 30 வினாடிகளில் தாக்கும் திறன் கொண்டது. மேலும், AH-1Z வைப்பர் (AH-1Z Viper) போன்ற அதிநவீன ஹெலிகாப்டர்கள் கடற்படை மற்றும் மெரைன் பிரிவுகளால் பயன்படுத்தப்படுகின்றன.
போக்குவரத்து மற்றும் உதவி ஹெலிகாப்டர்கள்:
- UH-60 பிளாக் ஹாக் (UH-60 Black Hawk): இந்த ஹெலிகாப்டர்கள் வீரர்களை ஏற்றிச் செல்லவும், போர்க்களத்தில் அவசர உதவிகளுக்கும் பயன்படுகின்றன. அமெரிக்காவிடம் இவ்வகையில் சுமார் 2,100 ஹெலிகாப்டர்கள் உள்ளன.
- CH-47 சினூக் (CH-47 Chinook): இந்த ஹெலிகாப்டர்கள் கனரகப் பீரங்கிகள் மற்றும் வாகனங்களை எளிதாகத் தூக்கிச் செல்லக்கூடியவை. இதில் MH-47G என்பது சிறப்புப் படையினருக்காக வடிவமைக்கப்பட்ட சினூக் மாடலாகும்.
உலகெங்கிலும் உள்ள அமெரிக்காவின் சுமார் 80-க்கும் மேற்பட்ட வான்படைத் தளங்களில் வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் கடற்படை மற்றும் தரைப்படையின் கீழ் இயங்கும் வான்பிரிவைத் தவிர, அமெரிக்க வான்படையிலேயே மட்டும் சுமார் 6,62,000 வீரர்கள் உள்ளனர். இதன் மூலம் அமெரிக்க இராணுவ பலம் எப்படியப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
கடல்வழி மேலாதிக்கம்: அமெரிக்கக் கடற்படையின் உலகளாவிய கட்டுப்பாடு
அமெரிக்கா இன்றும் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடற்படையைக் கொண்டுள்ளது. அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானம் தாங்கிக் கப்பல்கள், அழிப்புக் கப்பல்கள் (Destroyers), குரூஸர் (Cruisers) எனப் பல்வேறு வகையான கப்பல்களைக் கொண்டுள்ள அமெரிக்கக் கடற்படையின் பலத்தை விரிவாகக் காண்போம்.
அணுசக்தியால் இயங்கும் விமானம் தாங்கிக் கப்பல்கள்
1. நிமிட்ஸ் வகுப்பு (Nimitz-class): 1975 முதல் 2009 வரை இந்த ரகக் கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்பட்டன. இதில் இரண்டு A4W அணு உலைகள் உள்ளன. இவை சுமார் 2,60,000 குதிரைத்திறனை உருவாக்குகின்றன. இவை மணிக்கு 56 கி.மீ-க்கும் அதிக வேகத்தில் செல்லக்கூடியவை.
2. ஜெரால்ட் ஆர். ஃபோர்டு வகுப்பு (Gerald R. Ford-class): இவை மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல்களாகும். இது நிமிட்ஸ் வகையை விட மூன்று மடங்கு அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. பழைய விமானம் தாங்கிக் கப்பல்களில் விமானங்களை ஏவுவதற்கு நீராவி (Steam) பயன்படுத்தப்பட்டது. ஆனால், இதில் மின்காந்த விசை (EMALS) மூலம் விமானங்கள் மிக வேகமாகவும் பாதுகாப்பாகவும் ஏவப்படுகின்றன. இதிலுள்ள தானியங்கி வசதிகள் காரணமாக, நிமிட்ஸ் வகுப்பை விடக் குறைவான ஊழியர்களே தேவைப்படுகிறார்கள்; இது செலவுகளையும் குறைக்கிறது.

இந்த இரண்டு வகை விமானம் தாங்கிக் கப்பல்களும் அணுசக்தியால் இயக்கப்படுவதால், கப்பலில் உள்ள அணு உலைகளுக்கு ஒருமுறை எரிபொருள் நிரப்பப்பட்டால், சுமார் 20 முதல் 25 ஆண்டுகள் வரை தொடர்ந்து இயங்கும் திறன் கொண்டவை.
கப்பலின் கட்டமைப்பு மற்றும் வசதிகள்:
- ஒவ்வொரு கப்பலிலும் சுமார் 75 முதல் 80 விமானங்களைச் சுமந்து செல்ல முடியும்.
- எதிரி நாடுகளின் ஏவுகணைகளை அழிக்கும் தற்காப்பு ஏவுகணைகள், விரைவாகச் சுடும் துப்பாக்கிகள் மற்றும் நவீன ரேடார் அமைப்புகள் இதில் உள்ளன.
- தினமும் 4,00,000 கேலன் கடல்நீரை நன்னீராக மாற்றும் வசதி, நவீன மருத்துவமனை, பல் மருத்துவக் கூடங்கள் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்குத் தேவையான உணவைச் சேமித்து வைக்கும் கிடங்குகள் இதில் உள்ளன.
தற்போது அமெரிக்காவிடம் 11 விமானம் தாங்கிக் கப்பல்களும், 9 ஹெலிகாப்டர் தாங்கிக் கப்பல்களும் (Amphibious Assault Ships) உள்ளன.
நீர்மூழ்கிக் கப்பல்கள் (Submarines)
அமெரிக்கக் கடற்படையின் ஒரு தனிச்சிறப்பு என்னவென்றால், அதனிடம் உள்ள அனைத்து நீர்மூழ்கிக் கப்பல்களும் அணுசக்தியால் இயங்குபவை. டீசல் நீர்மூழ்கிக் கப்பல்கள் இவர்களிடம் இல்லை. அமெரிக்காவிடம் தற்போது சுமார் 70 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன.
இவற்றில் அணு உலைகள் இருப்பதால், இயங்குவதற்கு காற்றோ அல்லது எரிபொருளோ தேவையில்லை. இதனால் சுமார் 90 நாட்கள் வரை நீருக்கடியில் தொடர்ந்து இருக்க முடியும். கடல் நீரை மின்னாற்பகுப்பு (Electrolysis) செய்வதன் மூலம் சுவாசத்திற்குத் தேவையான ஆக்சிஜனையும், குடிப்பதற்குத் தேவையான நன்னீரையும் இந்த நீர்மூழ்கிக் கப்பல்களுக்குள்ளேயே தயாரித்துக் கொள்ள முடியும்.
இவை கடலுக்கு அடியில் நகரும்போது ஏற்படும் சத்தம், ஒரு சிறிய திமிங்கிலம் எழுப்பும் சத்தத்தை விடக் குறைவாகவே இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் எதிரிகளின் ரேடார்களில் (Sonar) இவை சிக்காது.
அமெரிக்காவின் முக்கிய நீர்மூழ்கிக் கப்பல் வகைகள்:
1. வர்ஜீனியா வகுப்பு (Virginia-class): தற்போதைய மிக நவீனமான தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் இவை. இவை ஆழமில்லாத கடற்கரைப் பகுதிகளிலும் ஆழமான கடலிலும் சமமாகச் செயல்படும் திறன் கொண்டவை. இதில் கண்ணாடி கேமராக்களுக்குப் பதிலாக டிஜிட்டல் சென்சார்கள் (போடோனிக் மாஸ்ட்கள் – Photonic Masts) பயன்படுத்தப்படுகின்றன.

2. சீவொல்ஃப் வகுப்பு (Seawolf-class): பனிப்போர் காலத்தில் சோவியத் ரஷ்யாவின் நீர்மூழ்கிக் கப்பல்களை வேட்டையாட இவை உருவாக்கப்பட்டன. இவை மிகவும் வேகமானவை, அமைதியானவை மற்றும் அதிகப்படியான ஆயுதங்களைச் சுமந்து செல்லக்கூடியவை.
3. லாஸ் ஏஞ்சல்ஸ் வகுப்பு (Los Angeles-class): இவை நீண்ட காலமாகச் சேவையில் இருப்பவை. தற்போது இவை படிப்படியாகச் சேவையிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றன.
4. ஓஹியோ வகுப்பு (Ohio-class): அமெரிக்காவின் அணுஆயுதப் படைகளின் முக்கிய அங்கமாகத் திகழும் இவை, பாலிஸ்டிக் ஏவுகணைகளைச் சுமந்து செல்பவை. இக்கப்பல்கள் கடலுக்கு அடியிலிருந்து பதிலடி கொடுக்கக்கூடியவை. இவை 20 ட்ரைடென்ட் II (Trident II D5) பாலிஸ்டிக் ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்டவை.
ஓஹியோ வகுப்பிலிருந்து மாற்றியமைக்கப்பட்ட வழிகாட்டப்பட்ட ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்கள், 154 டோமாஹாக் (Tomahawk) ஏவுகணைகளைச் சுமந்து செல்லக்கூடியவை. இவை ஒரே நேரத்தில் ஒரு பெரிய இராணுவத் தளத்தையே அழிக்க வல்லவை.
5. கொலம்பியா வகுப்பு (Columbia-class): பழைய ஓஹியோ வகுப்புக்குப் பதிலாக தற்போது இவை கட்டப்பட்டு வருகின்றன. இவை அதிக அமைதியானவை மற்றும் வாழ்நாள் முழுவதும் எரிபொருள் நிரப்பத் தேவையில்லாத அணு உலைகளைக் கொண்டவை.
அமெரிக்கா தனது நீர்மூழ்கிக் கப்பல்களின் இருப்பிடத்தை ஒருபோதும் அறிவிப்பதில்லை. இதன் மூலம் உலகக் கடல் பரப்பில் எங்கு வேண்டுமானாலும் அமெரிக்காவால் இரகசியமாகத் தாக்குதல் நடத்த முடியும்.
அமெரிக்கா 2026 மார்ச் மாதம், ஈரானின் ‘டெனா’ (Dena) கப்பல் இந்தியாவில் நடைபெற்ற கடற்படைப் பயிற்சியை முடித்துவிட்டு வரும்போது, இந்தியப் பெருங்கடலில் வைத்து இரகசியமாகத் தாக்க முடிந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஒரு நீர்மூழ்கிக் கப்பல் ‘டார்பிடோ’ (Torpedo) ஏவுகணையை ஏவி, ஒரு எதிரி நாட்டுப் போர்க்கப்பலை மூழ்கடித்த முதல் சம்பவம் இதுவாகும்.
அமெரிக்காவின் அழிப்புக் கப்பல்கள் (Destroyers)
அமெரிக்காவிடம் 83 அழிப்புக் கப்பல்கள் உள்ளன. இவை ஒரே நேரத்தில் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் தரைவழி இலக்குகளைத் தாக்கக்கூடியவை. ஒவ்வொரு அழிப்புக் கப்பலிலும் ஹெலிகாப்டர் தளமும், இரண்டு ஹெலிகாப்டர்களும் இருக்கும்.
எதிரிகளின் ஏவுகணைகள் வரும்போது, SeaRAM ஏவுகணைகள் அவற்றைத் நடுவானிலேயே தாக்கி அழித்துவிடும். அதுமட்டுமல்லாது, விநாடிக்கு 75 தோட்டாக்களைச் சுடும் Phalanx CIWS துப்பாக்கிகளும் இதில் இருக்கின்றன.
அமெரிக்க இராணுவப் பலம் என்று பார்க்கும்போது, ஆர்லீ பர்க் வகுப்பு (Arleigh Burke-class) கப்பல்களைத் தவிர்க்க முடியாது. இந்த வகைக் கப்பல்களில் உள்ள ஏஜிஸ் (Aegis) போர் அமைப்பு, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைக் கூட அழிக்கும் திறன் கொண்டது.
ஆர்லீ பர்க் கப்பல்களில் சுமார் 90 செங்குத்து ஏவுதளத் துவாரங்கள் (VLS) உள்ளன. இதில் டோமாஹாக் ஏவுகணைகள் மற்றும் பல தற்காப்பு ஏவுகணைகள் வைக்கப்பட்டுள்ளன. இக்கப்பலில் அதிக உணர்திறன் கொண்ட AN/SPY-6 ரேடார் பயன்படுத்தப்படுவதால், இலக்குகளைத் துல்லியமாகத் தாக்க முடிகிறது.
சும்வால்ட் வகுப்பு (Zumwalt-class) இவை அதிநவீன ‘ஸ்டெல்த்’ ரகக் கப்பல்களாகும். 600 அடி நீளமுள்ள இந்த பிரம்மாண்ட கப்பல், ரேடார்களுக்கு ஒரு சிறிய மீன்பிடி படகு போன்றே தென்படும். இதன் கத்தி போன்ற அமைப்பு ரேடார் அலைகளைச் சிதறடிக்கக்கூடியது.

சும்வால்ட் வகுப்பு கப்பல்கள் 78 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியவை. இந்த மின்சாரத்தைக் கொண்டு லேசர் ஆயுதங்களைக் கூட இயக்க முடியும். இக்கப்பல்களில் தானியங்கி வசதிகள் உள்ளதால், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வீரர்களே தேவைப்படுகின்றனர்.
தற்போது அமெரிக்கா Flight III Arleigh Burke கப்பல்களை ‘ஹைப்பர்சோனிக்’ (Hypersonic) ஏவுகணைகளை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைத்துள்ளது. இதில் புதிய ரேடார்கள் (AN/SPY-6) மற்றும் நவீன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை இதனுடன் இணைக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பிற போர்க்கப்பல்கள் மற்றும் கடற்படைப் பலம்
அமெரிக்காவிடம் நீர்நில வாழ் தாக்குதல் கப்பல்களான (Amphibious Assault Ships) வாஸ்ப் வகுப்பு (Wasp-class – LHD) மற்றும் அமெரிக்கா வகுப்பு (America-class – LHA) கப்பல்கள் உள்ளன. இவை செங்குத்தாக இயங்கும் போர் விமானங்களை (F-35B போன்றவை) இயக்கும் திறன் கொண்டவை. இவற்றில் காயமடைந்த வீரர்களுக்கு அதிநவீன அறுவை சிகிச்சை அறைகளும், 600-க்கும் மேற்பட்ட படுக்கை அறைகளும் உள்ளன.
விமானம் தாங்கிக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் க்ரூஸர் (Cruiser) கப்பல்கள் 122 ஏவுகணைத் துவாரங்களைக் கொண்டுள்ளன. எல்லா கப்பல்களை விடவும் அதிகப்படியான ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் திறன் இவற்றுக்கு உண்டு. இருப்பினும், 2026-ஆம் ஆண்டு நிலவரப்படி க்ரூஸர் கப்பல்கள் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டன. அவற்றின் பொறுப்புகளை தற்போது Flight III Arleigh Burke கப்பல்கள் ஏற்றுள்ளன.
லிட்டோரல் போர்க்கப்பல்கள் (Littoral Combat Ships – LCS): ஆழம் குறைந்த கடலோரப் பகுதிகளில் மிக வேகமாகச் செல்ல இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை மணிக்கு 74 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியவை. தேவையைப் பொறுத்து இவற்றிலுள்ள ஆயுதங்களை கண்ணிவெடிகளை அகற்றுவதற்கோ அல்லது சிறிய கப்பல்களைத் தாக்குவதற்கோ மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
கடற்படைப் பணியாளர்கள்:
அமெரிக்கக் கடற்படையில் தற்போது:
- நிரந்தர வீரர்கள்: சுமார் 3,44,000 பேர்.
- கடற்படை இருப்பு வீரர்கள் (Navy Reserve): சுமார் 57,000 பேர்.
- சிவில் பணியாளர்கள் (Non-military): தொழில்நுட்ப உதவி, கப்பல் பராமரிப்பு மற்றும் நிர்வாகப் பணிகளில் ஈடுபடும் சுமார் 2,10,000 சிவில் பணியாளர்கள் உள்ளனர்.
அமெரிக்க இராணுவ பலம்: ஏவுகணைகள் மற்றும் அணுஆயுதக் கிடங்கு
அமெரிக்கா நிலம், நீர், வான் என மூன்று தளங்களில் இருந்தும் அணுஆயுதங்களை ஏவும் பலத்தைக் கொண்டுள்ளது. அமெரிக்காவிடம் மொத்தம் 5,042 அணுக்கரு முனைகள் (Nuclear Warheads) உள்ளன. எந்த நேரத்திலும் ஏவுவதற்குத் தயாராக 1,770 அணுஆயுதங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
1. தரைவழித் தாக்குதல்: கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (ICBM)
நிலத்தடி ஏவுகணைத் தளங்களில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் அமெரிக்காவின் முக்கியமான தற்காப்பு அரணாகும். அமெரிக்காவின் மொன்டானா, வடக்கு டகோட்டா மற்றும் வயோமிங் ஆகிய இடங்களில் சுமார் 450 மினிட்மேன் III (Minuteman III) ஏவுகணைகள் உள்ளன. இவை மணிக்கு 24,000 கி.மீ (Mach 23) வேகத்தில் சென்று தாக்கக்கூடியவை. இதில் ஒரு அணுமுனையைப் பொருத்த முடியும்.

மினிட்மேன் III ஏவுகணைகளுக்குப் பதிலாக, அதிநவீன புதிய தலைமுறை ஏவுகணையான LGM-35A சென்டினல் (LGM-35A Sentinel) உருவாக்கப்பட்டு வருகிறது. இது 2030-இல் முழுமையாகப் பயன்பாட்டிற்கு வரும். சென்டினல் டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், மிக வேகமாகவும் பாதுகாப்பாகவும் இதில் அணுமுனைகளைப் பொருத்த முடியும்.
LGM-35A சென்டினல் ஏவுகணையில் W87-1 எனப்படும் அதிநவீன அணுக்கரு முனை பொருத்தப்பட உள்ளது. இதன் வெடிப்புத்திறன் 300 முதல் 475 கிலோடன் (kt) இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட குண்டை விட சுமார் 20 முதல் 30 மடங்கு அதிக சக்தி கொண்டது (ஹிரோஷிமா குண்டு 15 கிலோடன் மட்டுமே).
2. கடல் மற்றும் வான்வழித் தாக்குதல்
கடல் சார்ந்த ஓஹியோ வகுப்பு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களில் 20 ஏவுகணைகள் இருக்கும். ஒரு ஏவுகணையில் 8 முதல் 12 அணுமுனைகள் வரை பொருத்தலாம். வான் சார்ந்து B-2 ஸ்பிரிட் மற்றும் B-21 ரைய்டர் குண்டுவீச்சு விமானங்கள் மூலம் இலக்குகளை நோக்கிப் பறந்து சென்று அணுத்தாக்குதல் நடத்த முடியும்.
3. டோமாஹாக் ஏவுகணைகள் (Tomahawk Missiles)
தரைமட்டத்திலிருந்து மிகக் குறைந்த உயரத்தில் பறந்து செல்லும் டோமாஹாக் ஏவுகணைகள் ரேடார்களில் சிக்காது. இவை மணிக்கு 914 கி.மீ (Mach 0.74) வேகத்தில் செல்லக்கூடியவை. இவை 1,700 கி.மீ முதல் 2,500 கி.மீ வரை உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும்.

நவீன டோமாஹாக் பிளாக் V (Tomahawk Block V) ஏவுகணைகள் கடலில் நகர்ந்து செல்லும் எதிரிக் கப்பல்களைத் தேடிச் சென்று தாக்கக்கூடியவை. மேலும், இவை நிலத்தடி பதுங்கு குழிகள் மற்றும் பலப்படுத்தப்பட்ட கட்டிடங்களைத் தகர்க்கும் ‘பங்கர் பஸ்டர்’ (Bunker Buster) வசதியையும் கொண்டுள்ளன.
அமெரிக்க இராணுவ பலம்: ஏவுகணைகள் மற்றும் அணுஆயுதக் கிடங்கு
அமெரிக்கா நிலம், நீர், வான் என மூன்று தளங்களில் இருந்தும் அணுஆயுதங்களை ஏவும் வல்லமையைக் கொண்டுள்ளது. அமெரிக்காவிடம் மொத்தம் 5,042 அணுக்கரு முனைகள் (Nuclear Warheads) உள்ளன. எந்த நேரத்திலும் ஏவுவதற்குத் தயாராக 1,770 அணுஆயுதங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
நிலத்தடி ஏவுகணைகள்: கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (ICBM)
நிலத்தடி ஏவுகணைத் தளங்களில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் அமெரிக்காவின் முக்கியமான தற்காப்பு அரணாகும். அமெரிக்காவின் மொன்டானா, வடக்கு டகோட்டா மற்றும் வயோமிங் ஆகிய இடங்களில் சுமார் 450 மினிட்மேன் III (Minuteman III) ஏவுகணைகள் உள்ளன. இவை மணிக்கு 24,000 கி.மீ (Mach 23) வேகத்தில் சென்று தாக்கக்கூடியவை. இதில் ஒரு அணுமுனையைப் பொருத்த முடியும்.
புதிய தலைமுறை ஏவுகணை: LGM-35A சென்டினல் (LGM-35A Sentinel)
மினிட்மேன் III ஏவுகணைகளுக்குப் பதிலாக, அதிநவீன புதிய தலைமுறை ஏவுகணையான LGM-35A சென்டினல் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. இது 2030-ஆம் ஆண்டில் முழுமையாகப் பயன்பாட்டிற்கு வரும். சென்டினல் டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், மிக வேகமாகவும் பாதுகாப்பாகவும் இதில் அணுமுனைகளைப் பொருத்த முடியும்.

LGM-35A சென்டினல் அணுஆயுத ஏவுகணையாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் W87-1 எனப்படும் அதிநவீன அணுக்கரு முனை பொருத்தப்பட உள்ளது. இதன் வெடிப்புத்திறன் 300 முதல் 475 கிலோடன் (kt) வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவிடம் உள்ள அணுஆயுதங்கள் இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட குண்டுகளை விடச் சுமார் 20 முதல் 30 மடங்கு அதிக சக்தி கொண்டவை. ஹிரோஷிமாவில் வீசப்பட்ட குண்டு வெறும் 15 கிலோடன் (KT) மட்டுமே ஆற்றல் கொண்டது.
கடல் சார்ந்த ஓஹியோ வகுப்பு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களில் 20 ஏவுகணைகள் இருக்கும். ஒரு ஏவுகணையில் 8 முதல் 12 அணுமுனைகள் வரை பொருத்தலாம். வான் சார்ந்து B-2 ஸ்பிரிட் மற்றும் B-21 ரைய்டர் குண்டுவீச்சு விமானங்கள் மூலம் இலக்குகளை நோக்கிப் பறந்து சென்று அணுத்தாக்குதல் நடத்த முடியும்.
தரைமட்டத்திலிருந்து மிகக் குறைந்த உயரத்தில் பறந்து செல்லும் டோமாஹாக் (Tomahawk) ஏவுகணையானது ரேடார்களில் சிக்காது. இந்த ஏவுகணைகள் சுமார் மணிக்கு 914 கி.மீ (Mach 0.74) வேகத்தில் செல்லக்கூடியவை. இவை 1,700 கி.மீ முதல் 2,500 கி.மீ வரை உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கக்கூடியவை.
நவீன டோமாஹாக் பிளாக் V (Tomahawk Block V) ஏவுகணைகள் கடலில் நகர்ந்து செல்லும் எதிரிக் கப்பல்களைத் தேடிச் சென்று தாக்கக்கூடியவை. இவை நிலத்தடி பதுங்கு குழிகள் மற்றும் பலப்படுத்தப்பட்ட கட்டிடங்களைக் கூடத் தகர்க்கும் ‘பங்கர் பஸ்டர்’ (Bunker Buster) வசதியைக் கொண்டுள்ளன.
அமெரிக்க இராணுவ பலம் என்பது அதன் எல்லைகளுடன் முடிந்துவிடுவதில்லை. அது கடல் கடந்து, கண்டங்கள் கடந்து பரந்து விரிந்து கிடக்கிறது. அமெரிக்கா உலகளாவிய இராணுவத் தளங்களை 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் அமைத்துள்ளது. அமெரிக்கா தனது இராணுவத் தளங்களை ஜப்பானில் 120, ஜெர்மனியில் 119, தென் கொரியாவில் 73 எனப் பல்வேறு நாடுகளில் நிறுவியுள்ளது. ஒட்டுமொத்தமாக அமெரிக்காவிடம் 750-க்கும் மேற்பட்ட இராணுவத் தளங்கள் உள்ளன.
அமெரிக்க இராணுவம் வெறும் மனித பலத்தை மட்டும் நம்பியிருக்காமல், டிஜிட்டல் போர்முறைக்கும் மாறியுள்ளது. GenAI.mil என்பது அமெரிக்க அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இராணுவ வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வணிக ரீதியிலான உயர்தர செயற்கை நுண்ணறிவு மாடல்களைப் பாதுகாப்பான முறையில் வழங்குகிறது. இது இராணுவத் தரவு மற்றும் தகவல்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோல்டன் டோம் (Golden Dome) என்ற வான் பாதுகாப்பு வளையங்கள், எதிரி நாடுகளின் ஏவுகணைகள் வந்துகொண்டிருக்கும் போதே அவற்றைக் கண்டறிந்து அழித்துவிடும். இது அதிவேக ‘ஹைப்பர்சோனிக்’ ஏவுகணைகளைக் கூட இடைமறித்து அழிக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.
மற்ற நாடுகள் தங்கள் எல்லைகளைக் காப்பதையே இலக்காகக் கொண்டிருக்க, அமெரிக்கா உலகையே தனது எல்லையாக மாற்றி வைத்துள்ளது. ஒரு நாட்டின் பொருளாதாரமோ அல்லது பாதுகாப்போ அமெரிக்காவின் அனுமதியின்றி இயங்க முடியாது என்ற ஒரு சூழலை இந்த இராணுவ வலையமைப்பு உருவாக்கியுள்ளது. இதுவே அந்த நாட்டின் உலகளாவிய மேலாதிக்கத்தின் அச்சாணியாகும்.
அமெரிக்காவின் இராணுவ பலம் FAQ:
1. அமெரிக்க கடற்படையின் தற்போதைய முக்கிய பலம் என்ன?
அமெரிக்க கடற்படையிடம் உலகிலேயே வலிமையான தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் (SSN) உள்ளன. இதில் லோஸ் ஏஞ்சல்ஸ், சீவொல்ஃப் மற்றும் வர்ஜீனியா ஆகிய அதிநவீன வகுப்புகள் அடங்கும். இவை எதிரிக் கப்பல்களைத் தேடிக் கண்டறிந்து அழிப்பதில் முதன்மையானவை.
2. ‘தி கோல்டன் டோம்’ (The Golden Dome) என்பது எதைக் குறிக்கிறது?
இது அமெரிக்காவிற்காகத் திட்டமிடப்பட்டுள்ள ஒரு பல அடுக்கு ஏவுகணை பாதுகாப்பு அமைப்பாகும் (Multi-layer Missile Defense System). இது பாலிஸ்டிக், ஹைப்பர்சோனிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகளைத் தரைக்கு வரும் முன்பே வானிலேயே கண்டறிந்து அழிக்கும் திறன் கொண்டது.
3. அமெரிக்க இராணுவத் தளவாட உற்பத்தியில் உள்ள சவால் என்ன?
தற்போதைய போர்ச் சூழலில் ஏவுகணை உற்பத்தியை அதிகரிப்பது அமெரிக்காவிற்குப் பெரும் சவாலாக உள்ளது. ஏவுகணைகளின் உற்பத்தியை முழுமையாக அதிகரிக்க அமெரிக்க நிறுவனங்களுக்குக் குறைந்தது 1 முதல் 2 ஆண்டுகள் வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
4. பென்டகன் மற்றும் கடற்படைத் தலைமையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்ன?
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் எடுத்த முடிவின்படி, கடற்படைச் செயலாளர் ஜான் பெலன் (John Phelan) பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இராணுவத் தலைமையின் இந்த மாற்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
5. ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தற்போதைய இராணுவ உத்தி என்ன?
அமெரிக்கா நேரடியாகத் தரைப்போர் அல்லது வான்வழித் தாக்குதலில் இறங்குவதை விட, கடற்படை முற்றுகையை (Naval Blockade) ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஈரானின் எரிபொருள் மற்றும் பொருளாதார வர்த்தகத்தை முடக்கி, அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு வரவைப்பதே அமெரிக்காவின் தற்போதைய இராணுவ உத்தியாகும்.



