அமெரிக்கா இந்த உலகத்தின் அதிகாரப்பூர்வ தலைவனுமல்ல; ஒட்டுமொத்த பூமியையும் ஆளும் பேரரசும் அல்ல. ஆனால், உலக வரைபடத்தில் எந்தவொரு நாட்டின் பொருளாதாரத்தையும் தலைகீழாக மாற்றிப்போடும் அசாத்திய அதிகாரம் அமெரிக்காவின் கைகளில் இருக்கிறது.
அமெரிக்காவிற்குப் பிடிக்காத ஒரு நாட்டோடு மற்றொரு நாடு வர்த்தகம் செய்ய நினைத்தால் போதும்; அந்த நாட்டின் மீது அதிகப்படியான வரிகளையும் பொருளாதாரத் தடைகளையும் விதித்து அமெரிக்கா முடக்கிவிடுகிறது. ராணுவப் பலம் கொண்ட வல்லரசு என்று சொல்லிக்கொள்ளும் நாடுகள் கூட, அமெரிக்காவின் இந்த அதிரடிப் பொருளாதார நடவடிக்கைகளைக் கண்டு, அதைத் தட்டிக்கேட்கத் துணியாமல் தயங்கி நிற்பதே இன்றைய உலக எதார்த்தம்.

ஆயுதங்களை விடவும் ஆபத்தான, உலக நாடுகளைத் தன் விரல் அசைவில் வைத்திருக்கும் அமெரிக்காவின் இந்தப் பொருளாதாரப் பேராயுதம் எது தெரியுமா? அதுதான் ‘பெட்ரோ டாலர் ஒப்பந்தம்’. ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையும் அமெரிக்கா எப்படித் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது என்பதைப் புரியவைக்கும் அந்தப் பின்னிப் பிணைந்த ரகசிய வரலாற்றை இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.”
பெட்ரோ டாலர் ஒப்பந்தம்: இது எப்படி உருவானது? ஒரு வரலாற்றுப் பின்னணி
முதலில் நாம் 1944ஆம் ஆண்டிற்குச் செல்ல வேண்டும். இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வரும் நேரத்தில், உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து ‘பிரெட்டன் வுட்ஸ்’ (Bretton Woods) என்றொரு ஒப்பந்தம் செய்தன.
அதன்படி, உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டுப் பணத்தின் மதிப்பை அமெரிக்க டாலரோடு இணைத்தன. அமெரிக்கா தன் டாலரின் மதிப்பை தங்கத்தோடு (Gold) இணைத்தது. அதாவது, “எங்களிடம் 35 டாலரைக் கொடுத்தால், அதற்கு நிகரான 1 அவுன்ஸ் தங்கத்தை நாங்கள் தருவோம்” என்று அமெரிக்கா உறுதியளித்தது. இதனால் டாலர் உலகளாவிய நாணயமாக மாறியது.
காலப்போக்கில் அமெரிக்கா வியட்நாம் போர் போன்ற காரணங்களால் அளவுக்கு அதிகமாக டாலர்களை அச்சிட்டது. இதைக் கவனித்த பிரான்ஸ் போன்ற நாடுகள், “எங்களிடம் இருக்கும் டாலரை வாங்கிக்கொண்டு, அதற்குரிய தங்கத்தைக் கொடுங்கள்” என்று அமெரிக்காவிடம் கேட்கத் தொடங்கின. ஆனால், அமெரிக்காவிடம் அவ்வளவு தங்கம் இல்லை!
1971 ஆகஸ்ட் 15: அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் (Richard Nixon) அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இனி டாலரைக் கொடுத்தால் தங்கம் தர முடியாது என்று கையை விரித்தார். இது வரலாற்றில் ‘நிக்சன் ஷாக்’ (Nixon Shock) என்று அழைக்கப்படுகிறது.
1967இல் இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையில் போர் நடந்தது. இது ஆறு நாள் போர் என்று அழைக்கப்படுகிறது. அதில் அரபு நாடுகள் தோல்வியடைந்தன. அதற்குப் பழிவாங்கவும், தங்களின் இழந்த நிலங்களை மீட்கவும் அரபு நாடுகள் 1973இல் இஸ்ரேல் மீது மீண்டும் ஒரு போரைத் தொடுத்தன. அதுதான் ‘யோம் கிப்பூர் போர்’ (Yom Kippur War).
1973 அக்டோபர் மாதம், யூதர்களின் புனித நாளான ‘யோம் கிப்பூர்’ அன்று எகிப்து மற்றும் சவூதி தலைமையிலான அரபு நாடுகள் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை நடத்தின. ஆரம்பத்தில் இஸ்ரேல் நிலைகுலைந்தது.
அமெரிக்காவின் வருகை: தன் செல்லப் பிள்ளையான இஸ்ரேல் தோற்றுவிடக் கூடாது என்பதற்காக, அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன், இஸ்ரேலுக்கு அசுர வேகத்தில் நவீன ஆயுதங்களையும் ராணுவ உதவிகளையும் அள்ளிக் கொடுத்தார். அமெரிக்காவின் இந்த உதவியால் இஸ்ரேல் மீண்டும் போருக்குள் வந்து அரபு நாடுகளைத் தடுத்து நிறுத்தியது.
தங்களை ராணுவ ரீதியாகத் தடுத்த அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்குப் பொருளாதார ரீதியாக மரண அடி கொடுக்க சவூதி அரேபியாவின் மன்னர் பைசல் (King Faisal) ஒரு அதிரடி முடிவை எடுத்தார்.
எண்ணெய் தடை (Oil Embargo): இஸ்ரேலுக்கு ஆதரவளித்த அமெரிக்கா, நெதர்லாந்து, பிரிட்டன், கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதை அரபு நாடுகள் (OPEC) மொத்தமாக நிறுத்தின. உலக சந்தையில் எண்ணெயின் உற்பத்தி 5% குறைக்கப்பட்டது.
இந்தத் தடையால் ஒட்டுமொத்த மேற்கத்திய உலகமும் ஸ்தம்பித்தது. குறிப்பாக அமெரிக்காவில் பெட்ரோல் விலை வெறும் சில வாரங்களில் 4 மடங்கு (400%) உயர்ந்தது.
அமெரிக்காவில் பெட்ரோல் பங்குகளில் பல மைல் தூரத்திற்கு வாகனங்கள் வரிசையாக நின்றன. மக்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர். அமெரிக்காவின் தொழிற்சாலைகள் முடங்கி, நாடு கடுமையான பொருளாதார மந்தநிலைக்குள் (Stagflation) சென்றது.
தங்கத்தின் ஆதரவும் அரபு நாடுகளின் எண்ணெய்யும் இல்லாததால் டாலரின் மதிப்பு சரசரவென சரிந்தது. அமெரிக்கா பெரும் பொருளாதார நெருக்கடிக்குள்ளானது. டாலரைக் காப்பாற்ற அமெரிக்காவிற்கு ஒரு ‘பிரம்மாண்டமான’ ஐடியா தேவைப்பட்டது.
உலகில் தங்கத்தை விட மிக முக்கியமான பொருள் எது என்று அமெரிக்கா யோசித்தது. அதுதான் கச்சா எண்ணெய் (Black Gold / Crude Oil). ஏனெனில், எண்ணெய் இல்லாமல் உலகில் எந்த ஒரு நாடும் இயங்க முடியாது.
அப்போது ஏற்பட்ட ஒரு கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவும், வீழ்ந்து கொண்டிருந்த டாலரின் மதிப்பை முட்டுக்கொடுத்து நிறுத்தவும் அமெரிக்கா ஒரு மாபெரும் திட்டம் தீட்டியது. அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த நாடு: சவூதி அரேபியா. ஏனெனில், அப்போது உலகிலேயே அதிக எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாகவும், அரபு நாடுகளின் தலைவனாகவும் சவூதி விளங்கியது.
நெருக்கடி முற்றிய நிலையில், அமெரிக்கா வேறு வழியின்றி 1974 ஜூன் மாதம்: அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் மற்றும் அவரது வெளியுறவுத்துறை அமைச்சர் ஹென்றி கிசிஞ்சர் (Henry Kissinger) ஆகியோர் சவூதி அரேபியாவுடன் ஒரு ரகசிய வரலாற்று ஒப்பந்தம் செய்துகொண்டனர்.
அமெரிக்காவின் நிபந்தனை (சவூதிக்கு): “நீங்கள் உலக நாடுகளுக்கு விற்கும் கச்சா எண்ணெயை அமெரிக்க டாலருக்கு மட்டுமே விற்க வேண்டும். வேறு எந்த நாட்டுப் பணத்தையும் வாங்கக் கூடாது.”
சவூதியின் நிபந்தனை (அமெரிக்காவிற்கு): “எங்கள் நாட்டுக்கும், எங்கள் மன்னர் குடும்பத்திற்கும் பாதுகாப்பு இல்லை. நீங்கள் எங்களுக்கு நவீன ஆயுதங்களையும், ராணுவப் பாதுகாப்பையும் தர வேண்டும்.”
அமெரிக்கா இதற்குச் சம்மதித்தது. மேலும், எண்ணெய் விற்று சவூதிக்குக் கிடைக்கும் உபரி டாலர்களை (Petrodollars) மீண்டும் அமெரிக்க வங்கிகளிலும், அமெரிக்க அரசுப் பத்திரங்களிலும் (US Treasuries) முதலீடு செய்ய வேண்டும் என்றும் சவூதி ஒப்புக்கொண்டது.
இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு எப்படிப் பலன் தந்தது?

அமெரிக்காவுக்கு ஒரு அசாத்தியமான அதிர்ஷ்டம் கிடைத்தது. உலக நாடுகள் அனைத்தும் டாலரைக் கேட்பதால், அமெரிக்கா எவ்வளவு டாலர்களை வேண்டுமானாலும் அச்சிடலாம், அதற்கு உலக சந்தையில் மதிப்பு இருந்தது.
உதாரணத்திற்கு: ஒரு 100 டாலர் நோட்டை அச்சிட அமெரிக்காவிற்கு வெறும் சில சென்ட்டுகள் (சில பைசாக்கள்) மட்டுமே செலவாகும். ஆனால், அந்த 100 டாலரைக் கொடுத்து உலக நாடுகளிடமிருந்து பல நூறு லிட்டர் கச்சா எண்ணெயையோ அல்லது விலைமதிப்பற்ற உழைப்பையோ அமெரிக்காவால் எளிதாக வாங்க முடிந்தது. இதைப் பொருளாதாரத்தில் ‘சிக்னியோரேஜ்’ (Seigniorage) என்பார்கள்.
இதுதான் அமெரிக்காவின் ஆகச்சிறந்த ராஜதந்திரம். சவூதி மற்றும் அரபு நாடுகள் எண்ணெயை விற்று கோடிக்கணக்கான டாலர்களைச் சம்பாதித்தன. அந்தப் பணத்தை அவர்கள் சும்மா வைத்திருக்க முடியாது. பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
ஒப்பந்தத்தின்படி, அரபு நாடுகள் அந்த ‘பெட்ரோ டாலர்களை’ மீண்டும் அமெரிக்காவிற்கே கொண்டு வந்தன. அமெரிக்க அரசுப் பத்திரங்கள் (US Treasury Bonds) மற்றும் அமெரிக்க வங்கிகளில் முதலீடு செய்தன. இதற்கு “பெட்ரோ டாலர் மறுசுழற்சி” (Petrodollar Recycling) என்று பெயர்.
உலக நாடுகளின் பணம் அனைத்தும் அமெரிக்க வங்கிகளுக்குள் வந்ததால், அமெரிக்காவிற்கு மிகக் குறைந்த வட்டியில் உலகளாவிய கடன் கிடைத்தது. அந்தப் பணத்தை வைத்து அமெரிக்கா தன் நாட்டு உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் ராணுவத்தை அசுர வேகத்தில் பலப்படுத்தியது.
உலக வர்த்தகம் அனைத்தும் டாலர் மூலமாகவும், அமெரிக்காவின் SWIFT என்ற வங்கிப் பரிவர்த்தனை நெட்வொர்க் மூலமாகவும் நடந்ததால், அமெரிக்காவிற்கு ஒரு மறைமுக அதிகாரம் கிடைத்தது பெட்ரோ டாலர் ஒப்பந்தம் மூலம்.
ஒரு நாடு அமெரிக்காவிற்கு எதிராக நடந்துகொண்டால், அந்த நாடு டாலரைப் பயன்படுத்த முடியாதபடி அமெரிக்காவால் தடை விதிக்க முடியும் (எடுத்துக்காட்டாக: ஈரான், வடகொரியா, மற்றும் அண்மைய ஆண்டுகளில் ரஷ்யா மீதான தடைகள்). டாலர் இல்லை என்றால் அந்த நாடுகளால் உலக சந்தையில் எண்ணெயோ அல்லது வேறு பொருட்களையோ வாங்கவோ விற்கவோ முடியாது.
பெட்ரோ டாலர் ஒப்பந்தம் இல்லாதிருந்தால், உலக நாடுகள் சவூதியிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்க டாலரைத் தேடி ஓடாமல், சவூதி அரேபியாவின் சொந்த நாணயமான ‘சவூதி ரியால்’ (Saudi Riyal) போன்ற நாணயங்களைத்தான் பயன்படுத்த வேண்டியிருந்திருக்கும்.
இதனால், உலகமே சவூதி ரியாலைச் சேமித்து வைக்க (Reserve Currency) போட்டி போட்டிருக்கும்; சவூதி பணத்தின் மதிப்பு சர்வதேச அளவில் உச்சத்தைத் தொட்டிருக்கும். இந்த அசுர பலத்தை வைத்து அரபு நாடுகள் அமெரிக்காவை நம்பியிருக்காமல், தங்களுடைய சொந்தப் பணத்திலேயே உலக நாடுகளுடன் வர்த்தகம் செய்து, உலகப் பொருளாதாரத்தையே தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பார்கள்.
அமெரிக்காவின் ராணுவப் பிடிக்குள் சிக்காமல், தங்களின் பெரும் செல்வத்தைக் கொண்டு சொந்தமாகவே நவீன ராணுவக் கட்டமைப்பு, விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய முதலீடுகளைச் செய்து, மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக இன்று உலகின் முதன்மை அதிகார மையமாக அரபு நாடுகள் மிரட்டியிருக்கும்!
உலகப் பொருளாதாரத்தில் பெட்ரோ டாலரின் அசுர வளர்ச்சி
1974 பெட்ரோ டாலர் ஒப்பந்தத்திற்குப் பிறகு, உலக நாடுகள் எங்கு திரும்பினாலும் ஒரு எதார்த்தத்தை எதிர்கொண்டன: “டாலர் இல்லை என்றால் உங்கள் நாட்டில் வண்டிகள் ஓடாது, தொழிற்சாலைகள் இயங்காது.”
ஒரு பெரிய தொழிற்சாலை இருக்கிறது என வைப்போம். அதற்கு அரபு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டும். வேறு நாடுகள் தங்களது நோட்டுகளைக் கொடுத்தால் சவூதியோ, குவைத்தோ வாங்க மறுத்துவிடும். அவர்களுக்கு அமெரிக்க டாலர் மட்டுமே வேண்டும்.
அப்படியானால் வேறு நாடுகள் தன் நாட்டுத் துணிகளையும், நறுமணப் பொருட்களையும் அமெரிக்காவிற்கோ அல்லது சர்வதேச சந்தைக்கோ ஏற்றுமதி செய்து, கஷ்டப்பட்டு டாலரைச் சம்பாதிக்க வேண்டும். அந்த டாலரை ஒரு பாதுகாப்புப் பெட்டகத்தில் சேமித்து வைத்து, அதன் மூலமே எண்ணெய் வாங்க முடியும்.
இந்த ஒரு கட்டாயத்தால், உலகின் 150க்கும் மேற்பட்ட நாடுகள் “எண்ணெய் வாங்குவதற்கான அவசர நிதி” (Emergency Oil Fund) போல டாலரைச் சேமிக்கத் தொடங்கின.
எண்ணெய் வர்த்தகம் முழுமையாக டாலருக்கு மாறியதால், தங்கம், வெள்ளி, இரும்பு, கோதுமை, அரிசி போன்ற பிற அத்தியாவசியப் பொருட்களின் சர்வதேச விலையும் டாலரிலேயே நிர்ணயம் செய்யப்படத் தொடங்கியது.
உலகப் பொருளாதாரத்தில் எப்போது மந்தநிலை அல்லது போர் வந்தாலும், உலக முதலீட்டாளர்கள் மற்றும் நாடுகளின் மத்திய வங்கிகள் நம்புவது அமெரிக்க டாலரைத்தான். ஏனெனில், அதற்குப் பின்னால் உலகின் மிகப்பெரிய ராணுவமும், நிலையான அரசாங்கமும் (அமெரிக்கா) இருக்கிறது.
தங்கள் நாட்டுப் பணத்தின் மதிப்பு திடீரென சரிந்தால் நாடே திவாலாகிவிடும் (உதாரணமாக 1997 ஆசிய பொருளாதார நெருக்கடி). அதிலிருந்து தப்பிக்க, நாடுகள் தங்களுடைய சொந்தப் பணத்தைச் சேமிப்பதற்குப் பதிலாக, மதிப்பு மாறாத டாலரை வாங்கித் தங்கள் மத்திய வங்கிகளில் (Reserve Banks) சேமித்து வைத்தன.
உலக நாடுகள் டாலரை வெறும் காகிதமாகப் பெட்டியில் பூட்டி வைக்கவில்லை. அப்படி வைத்தால் வட்டி கிடைக்காது. எனவே, அவர்கள் அந்த டாலர்களை அமெரிக்க அரசிடமே கடனாகக் கொடுத்து, அதற்குப் பகரமாக அமெரிக்க அரசுப் பத்திரங்களை (US Treasury Bonds) வாங்கினர்.
உலக நாடுகள் அனைத்தும் டாலரைச் சேமிக்கத் தொடங்கியதால், அமெரிக்காவின் டாலர் ஒரு நாட்டின் நாணயம் என்ற நிலையைக் கடந்து, “உலகப் பொருளாதாரத்தின் ரத்த ஓட்டமாக” மாறியது. மற்ற நாடுகள் கஷ்டப்பட்டு உழைத்துச் சேர்த்த டாலர் சேமிப்புதான், அமெரிக்காவை உலகின் அசைக்க முடியாத பொருளாதாரப் பேரரசாக சிம்மாசனத்தில் அமர வைத்தது!
தற்போதைய சவால்கள்: பெட்ரோ டாலர் ஒப்பந்தத்தின் ஆயுள் முடிகிறதா?

1974ஆம் ஆண்டு சவூதி அரேபியாவும் அமெரிக்காவும் செய்து கொண்ட 50 ஆண்டுகால பெட்ரோ டாலர் ஒப்பந்தம், அதிகாரப்பூர்வமற்ற காலக்கெடுவின்படி கடந்த 2024 ஜூன் மாதத்துடன் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியது.
அதன் பிறகு சவூதி அரேபியா இந்த ஒப்பந்தத்தை அப்படியே குருட்டுத்தனமாக நீட்டிக்க விரும்பவில்லை. “நாங்கள் அமெரிக்க டாலருக்கு மட்டும்தான் எண்ணெய் விற்போம்” என்ற ஒற்றை விதியை மாற்றி, உலக நாடுகளுக்கு கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது.
அமெரிக்கா தன் டாலர் பலத்தை வைத்து பிற நாடுகளுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை (Sanctions) ஆயுதமாகப் பயன்படுத்துவதால், உலக நாடுகள் டாலரைத் தவிர்க்கத் தொடங்கியுள்ளன.
உலகிலேயே அதிக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடு சீனா. சவூதி அரேபியாவிடம் சீனா, “நாங்கள் உங்களிடம் வாங்கும் எண்ணெய்க்கு அமெரிக்க டாலரைத் தராமல், எங்கள் நாட்டுப் பணமான யுவானை (Yuan) தருகிறோம், வாங்கிக் கொள்ளுங்கள்” என்று ஒப்பந்தம் செய்துள்ளது. சவூதியும் இதற்குச் சம்மதித்து யுவான் மற்றும் பிற உள்ளூர் நாணயங்களை ஏற்கத் தொடங்கியுள்ளது.
உக்ரைன் போருக்குப் பிறகு, ரஷ்யாவை சர்வதேச டாலர் பரிவர்த்தனை அமைப்பான ‘SWIFT’-லிருந்து அமெரிக்கா நீக்கியது. ஆனால் ரஷ்யா அசரவில்லை. இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்குத் தன் எண்ணெயை இந்திய ரூபாய் மற்றும் ரஷ்ய ரூபிள் (Ruble) நாணயங்களிலேயே நேரடியாக விற்கத் தொடங்கியது.
ஈரான் பல தசாப்தங்களாக அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளைச் சந்தித்து வரும் நாடு. தங்களால் டாலரைப் பயன்படுத்த முடியாது என்பதால், ஈரான் தன் கச்சா எண்ணெயை டாலர் இல்லாமல் விற்கப் பழகிக்கொண்டது. சீனா போன்ற நாடுகளுக்குப் பெரும் தள்ளுபடி விலையில் யுவான் நாணயத்தைப் பெற்றுக்கொண்டு ரகசியமாகவும் நேரடியாகவும் எண்ணெய் விநியோகம் செய்கிறது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் (இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்கள், செங்கடல் பகுதியில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் போன்றவற்றின் பின்னணியில்) அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான நிழல் யுத்தம் (Proxy War) ஒரு நேரடிப் போர்ச் சூழலாகவே மாறியுள்ளது.
இந்த ராணுவப் பதற்றத்தால், ஈரான் தற்போது ரஷ்யா மற்றும் சீனாவுடன் மிக நெருக்கமான ராணுவப் பொருளாதாரக் கூட்டணியை அமைத்துள்ளது. இந்த மூன்று நாடுகளும் இணைந்து “டாலர் இல்லாத வர்த்தக வளையத்தை” (BRICS நாடுகள் மூலம்) பலப்படுத்தி வருகின்றன.
பெட்ரோ டாலர் வீழ்ந்தால் உலகிற்கு என்ன நடக்கும்?
நாடுகள் அனைத்தும் தங்கள் அவசரத் தேவைகளுக்காகவும், சர்வதேச வர்த்தகத்திற்காகவும் பில்லியன் கணக்கில் டாலர்களைத் தங்கள் மத்திய வங்கிகளில் சேமித்து வைத்துள்ளன (Foreign Exchange Reserves). பெட்ரோ டாலர் வீழ்ந்து, உலகளவில் டாலருக்கான தேவை குறைந்தால், டாலரின் மதிப்பு சர்வதேச சந்தையில் சரசரவெனச் சரியும்.
உதாரணத்திற்கு, ஒரு நாடு 100 பில்லியன் மதிப்புள்ள டாலரைச் சேமித்து வைத்துள்ளது எனில், டாலர் வீழ்ச்சியால் அதன் உண்மையான வாங்கும் திறன் (Purchasing Power) பாதியாகக் குறையலாம். அதாவது, கஷ்டப்பட்டு உழைத்துச் சேர்த்த நாடுகளின் சொத்து மதிப்பு ஒரே நாளில் பெருமளவில் குறைந்துவிடும்.
டாலரின் ஒற்றை ஆதிக்கம் முடிவுக்கு வரும்போது, உலக வர்த்தகம் பல நாணயங்களுக்குப் பிரிந்து செல்லும். நாடுகள் தங்களுக்கு நெருக்கமான நாணயங்களில் வர்த்தகம் செய்யும். ஆசிய நாடுகள் சீன யுவானையும் (Yuan), ஐரோப்பிய நாடுகள் யூரோவையும் (Euro), ரஷ்யா போன்ற நாடுகள் தங்களின் சொந்த நாணயங்களையும் பயன்படுத்தும்.
இதனால் சர்வதேச வர்த்தகத்தில் ஒரு நிலையற்ற தன்மை (Volatility) உருவாகும். எந்தப் பொருளுக்கு எந்த நாணயத்தில் பணம் செலுத்துவது என்பதில் குழப்பங்களும், நாணய மாற்று வீதத்தில் (Exchange Rates) கடுமையான ஏற்ற இறக்கங்களும் தோன்றும்.
பெட்ரோ டாலர் வீழ்ச்சி அமெரிக்காவிற்குள் மிகப்பெரிய பொருளாதாரப் பேரழிவை ஏற்படுத்தும். உலக நாடுகளிடம் இருக்கும் தேவையில்லாத டாலர்கள் அனைத்தும் மீண்டும் அமெரிக்காவிற்கே திரும்ப ஓடிவரும்.
அமெரிக்க சந்தையில் டாலர்களின் வரத்து அளவுக்கு அதிகமாக உயர்ந்து, அங்கு பொருட்களின் விலை தாறுமாறாக உயரும் (Hyperinflation). அமெரிக்காவின் பொருளாதாரம் பலவீனமடைந்தால், அது உலகளாவிய பொருளாதார மந்தநிலையை (Global Recession) உருவாக்கும். ஏனெனில், அமெரிக்காதான் உலகின் மிகப்பெரிய நுகர்வோர் சந்தை (Consumer Market). அவர்கள் வாங்குவதை நிறுத்தினால், பிற நாடுகளின் ஏற்றுமதி வர்த்தகம் முடங்கிவிடும்.
உலகப் பொருளாதாரத்தின் அடுத்த கட்டம் என்ன?
1944இல் பிரெட்டன் வுட்ஸ் அமைப்பில் தொடங்கி, 1974இல் சவூதி அரேபியாவுடன் போடப்பட்ட பெட்ரோ டாலர் ஒப்பந்தம் மூலம் உலகையே தன் ஒற்றைக் குடையின் கீழ் வைத்திருந்தது அமெரிக்க டாலர். ஆனால், 2020களுக்குப் பிந்தைய தற்போதைய உலக அரசியல் நகர்வுகளும், சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளின் தீவிர எதிர்ப்புகளும் அரை நூற்றாண்டு கால பெட்ரோ டாலர் சகாப்தத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கத் தொடங்கிவிட்டன.
உக்ரைன் போர், ஈரான் மீதான போர், ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் சவூதி அரேபியாவின் புதிய நிலைப்பாடு காரணமாக உலக நாடுகள் டாலரைத் தவிர்த்து (De-Dollarization) யுவான், ரூபிள், ரூபாய் போன்ற உள்ளூர் நாணயங்களில் எண்ணெய் வர்த்தகத்தை நடத்தத் தொடங்கிவிட்டன.
இனி உலகப் பொருளாதாரத்தை அமெரிக்க டாலர் மட்டுமே ஆளப் போவதில்லை. டாலர் தனது முழு மதிப்பை இழக்காது என்றாலும், அதன் ஒற்றை ஆதிக்கம் (Monopoly) முடிவுக்கு வரும். உலக வர்த்தகம் மூன்று பெரிய பிரிவுகளாகப் பிரிவதற்கு சாத்தியங்கள் அதிகம்.
சீனா மற்றும் அதன் நட்பு நாடுகள் யுவானையும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் சில மேற்கத்திய ஆதரவு நாடுகள் டாலரையும், வேறு சிறு நாடுகள் தங்களுக்குள் இருதரப்பு வர்த்தகத்திற்கு உள்ளூர் நாணயங்களைப் பயன்படுத்தும் சுதந்திரம் அதிகரிக்கும்.
காகிதப் பணத்தைக் கடந்து, நாடுகள் தங்களின் சொந்த மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்களைக் (Central Bank Digital Currencies – CBDC) கொண்டு சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்கும். அமெரிக்காவின் ‘SWIFT’ வங்கி நெட்வொர்க்கிற்கு மாற்றாகச் சீனாவின் CIPS மற்றும் பிற பிராந்தியப் பரிவர்த்தனை முறைகள் உலகெங்கும் பலம்பெறும்.
வளர்ந்து வரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு இது ஒரு புதிய விடியலாக இருக்கும். அமெரிக்கா விதிக்கும் பொருளாதாரத் தடைகளால் ஒரு நாட்டின் பொருளாதாரம் இனி ஒரே நாளில் முடங்கிவிடாது. கச்சா எண்ணெய் வாங்க டாலர் தேவையில்லை என்ற நிலை வரும்போது, நாடுகளின் அந்நியச் செலாவணி பற்றாக்குறை (Forex Crisis) பெருமளவு குறையும்.
இவ்வுலகில் என்றும் அழியாத பேரரசு என்று எதுவுமே இல்லை. காலத்தின் பெருவெளியில் உரோமானியப் பேரரசு, ஹப்ஸ்பர்க் சாம்ராஜ்யம், பிரிட்டிஷ் பேரரசு எனப் பெரும் பலம்பெற்ற பேரரசுகள் எல்லாம் ஒரு காலகட்டத்தில் உச்சத்தில் இருந்துவிட்டு, பின்பு சரிவைச் சந்தித்ததே வரலாறு.
பல நூறு வருடங்கள் உலகை ஆட்டிப்படைத்த அரசுகளையெல்லாம் வீழ்ச்சியடையச் செய்து, காலச் சக்கரத்தை இறைவன் ஒரு சுழற்சியாகவே வைத்துள்ளான். அந்த வரலாற்றுச் சுழற்சியின் அடுத்த கட்டமாக, இப்போது அமெரிக்க சாம்ராஜ்யத்தின் சரிவுக்கான நேரத்தை காலம் கணித்துக்கொண்டிருக்கிறது.
பெட்ரோ டாலரின் வீழ்ச்சி என்பது வெறும் அமெரிக்கப் பேரரசின் சரிவு மட்டுமல்ல; அது ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தின் “ஜனநாயகமயமாக்கல்” (Democratization of Global Finance) ஆகும்.
ஒரு பெரும் புயல் வீசும்போது ஆரம்பத்தில் சில ஆண்டுகள் உலகச் சந்தையில் கடுமையான குழப்பங்களும், பொருளாதார மந்தநிலையும், நாணய மதிப்பில் அசுர ஏற்ற இறக்கங்களும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. ஆனால், அந்தப் புயல் ஓய்ந்த பிறகு பிறக்கும் புதிய உலகம் — ஒரு குறிப்பிட்ட ஒற்றை நாட்டை மட்டும் நம்பி அடிமைப்பட்டுக் கிடக்காமல், பல நாடுகள் சமபலத்துடன் கைகோர்த்து வர்த்தகம் செய்யும் ஒரு பன்முகத்தன்மை கொண்ட, சுதந்திரமான பொருளாதாரமாகவே இருக்கும்!
பெட்ரோ டாலர் ஒப்பந்தம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
பெட்ரோ டாலர் ஒப்பந்தம் (Petrodollar Agreement) என்றால் என்ன?
1974ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையே ஏற்பட்ட ஒரு ரகசிய ஒப்பந்தமாகும். இதன் படி, சவூதி அரேபியா தனது கச்சா எண்ணெயை அமெரிக்க டாலருக்கு மட்டுமே விற்க ஒப்புக்கொண்டது. அதற்குப் பகரமாக அமெரிக்கா சவூதிக்கு நவீன ஆயுதங்களையும் ராணுவப் பாதுகாப்பையும் வழங்கியது.
இந்த ஒப்பந்தத்தால் அமெரிக்காவிற்கு என்ன லாபம் கிடைத்தது?
உலக நாடுகள் அனைத்தும் எண்ணெய் வாங்குவதற்காக அமெரிக்க டாலரைச் சேமித்து வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அமெரிக்கா தங்கு தடையின்றி எவ்வளவு டாலர்களை வேண்டுமானாலும் அச்சிட்டு உலகச் சந்தையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், உலகின் அசைக்க முடியாத பொருளாதாரப் பேரரசாகவும் மாறியது.
‘பெட்ரோ டாலர் மறுசுழற்சி’ (Petrodollar Recycling) என்றால் என்ன?
அரபு நாடுகள் எண்ணெயை விற்றுச் சம்பாதித்த கோடிக்கணக்கான உபரி டாலர்களைச் சும்மா வைக்காமல், ஒப்பந்தத்தின்படி மீண்டும் அமெரிக்க வங்கிகளிலும் அமெரிக்க அரசுப் பத்திரங்களிலும் முதலீடு செய்தனர். உலக நாடுகளின் பணம் இப்படி மீண்டும் அமெரிக்காவிற்கே சுழன்று வந்ததையே ‘பெட்ரோ டாலர் மறுசுழற்சி’ என்பார்கள்.
தற்போது பெட்ரோ டாலர் ஒப்பந்தத்திற்கு என்ன சவால்கள் ஏற்பட்டுள்ளன?
50 ஆண்டுகால இந்த ஒப்பந்தத்தின் முக்கிய கட்டம் கடந்த 2024 ஜூன் மாதத்துடன் நிறைவடைந்தது. இப்போது சவூதி அரேபியா டாலர் அல்லாத பிற உள்ளூர் நாணயங்களையும் (சீன யுவான் போன்றவை) எண்ணெய் வர்த்தகத்திற்கு ஏற்கத் தொடங்கியுள்ளது. மேலும் சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள் டாலரைத் தவிர்த்து (De-Dollarization) வர்த்தகம் செய்வது இதற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
பெட்ரோ டாலர் வீழ்ந்தால் உலகப் பொருளாதாரத்தில் என்ன மாற்றம் ஏற்படும்?
உலக வர்த்தகம் அமெரிக்க டாலரின் ஒற்றை ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, சீன யுவான், ஐரோப்பிய யூரோ மற்றும் உள்ளூர் நாணயங்கள் எனப் பல பிரிவுகளாகப் பிரியும். ஆரம்பத்தில் சில ஆண்டுகள் சந்தையில் குழப்பங்கள் இருந்தாலும், இறுதியில் ஒற்றை நாட்டை நம்பியிருக்காமல் பல நாடுகள் சமபலத்துடன் விளங்கும் ஒரு சுதந்திரமான “ஜனநாயகப் பொருளாதாரம்” உருவாகும்.


